Sunday, July 25, 2010
கல்லறைகளின் கதறல்கள்........
ஓங்கி உயர்ந்த மரங்களின் பேயாட்டம் பெருங்காற்றில்,
அடர் கிளை உரசலில் பழுத்த இலையொன்று
ஆயுள் முடிந்ததாய் பரவசித்து, விடுபட்டுத் தலை சுற்றி
மண் நோக்கி விரைந்தது......
சுற்றிச் சுழன்று மண்ணுடன் மக்க வீழ்ந்த இடம்
மாவீரன் விதைக்கப் பட்ட நாற்று மேடை,
பேரானந்தத்துடன் – பிறவிப்
பய னென இறுமாந்தது.....
மந்தகாசமான மாலை வெயில், கல்லறை அருகில்
சருகாகிச் சாக கடைசி ஆசை பூண்டது - அதன் மோனத்
தவத்தைக் குலைத்தது சன்னமான ஒலி,
பலவீன விம்மலுடன் கூடிய அழுகுரல்..
மிக மிக அருகில்
புரியவில்லை அதற்கு......,
மயான அமைதி தொடர்ந்தது மீண்டும்....
உருண்டது நேரம், பகலை விழுங்கியது இரவு,
கல்லறைகளின் அழகை நிலவில் இரசிக்க ஆரம்பிக்கையில்
திடுமெனக் கிளம்பியவோர் அவல ஓலத்தில் திடுக்குற்றது இலை,
இப்போதும் அதே விம்மலும், அழுகையும்
முன்னரிலும் பல மடங்காய், மிகப் பயங்கரமாய், திக்கெட்டிலுமிருந்து.....
தெளிவாக செவியில் அறைந்தது ஒப்பாரிக் குரல்,
ஏக காலத்தில் கல்லறைகளின் கதறல்கள் – “எம் மக்கள், பசியிலும் குளிரிலும், நாற்றத்திலும்
முட்கம்பி வேலிகள் பின்னால்
வதையுறும் அவலம் ஏன் ?”….என
வான் பிளந்தது கதறல், அழுகுரல் ஓங்கியது
எங்கோ பொழிவதற்காய் சென்று கொண்டிருந்த கருமுகில்
கூட்டங்கள் திசை மாறி
அவற்றுடன் முகாரி பாடின....
மழை நீரில் சிக்குண்ட இலை
இடம்மறியபடி இறுதியாக இரந்து
மன்றாடத் தொடங்கியது
படைத்தவனிடம்......
"கல்லறையிலாவது இவர்கள்
அமைதியாகத் துயில
விரைவில் ஏதேனும் வழி செய் ”
Friday, July 9, 2010
உனக்கான காத்திருப்பு.....!
என்னை எனக்கு உணர்த்தி
உன்னை என்னில் கரைத்துப்
பின் காலி செய்த இதய அறைகள்
வெறிச்சோடிப் போனாலும்
கனம் பல மடங்கானதாய் உயிர் கதற,
இணையைப் பிரிந்த குயிலொன்று
எனக்குமாய்ச் சேர்த்து முடிவற்ற
காற்றில் தன் சோகம் கரைத்து,
கணப் பொழுதில் மாறிவிட்ட
காதலுக்கு கறுப்பு வர்ணம் தீட்டியது.
கனவில் உனைக் காண
உறங்கும் நாட்கள் மாறி,
தினம் மகிழ்ந்து மலர்வதும்
பின் கருகிச் சருகாவதுமாய்
மறந்தும் மூடாத விழிகளுடன்
நெக்குருகி நானிருக்க,
ஒன்றாய் நாமிருந்த
தித்திக்கும் நினைவுப் பொதி சுமந்து
மீண்டும் எமைத் தாங்கும் வரம் வேண்டி
ஒற்றை இருக்கையும்
என்னுடன் காத்திருக்கிறது
கடுகி வருவாயா,
காலன் என் கை பிடிக்கு முன்னே... ..???
Sunday, July 4, 2010
செவி சாய்க்க மாட்டீரா ?
தானாயும் திருந்தீராம், சொல் புத்தி கேளீராம்
வெட்டுவது எம்மையும், உமக்கான குழியையும் தான்..
பிள்ளை பறிகொடுத்த அன்னையாய் பூமித்தாய்
கதறுவது உம் செவியில் ஏறாதா…???
நீர் பிறந்தவுடன் தொட்டிலாயும்
மாண்டவுடன் கொள்ளியாயும் இடையில் பல
தேவைக்காயும் எம்மை நாம் அர்ப்பணிக்க
கிஞ்சித்தும் சிந்தியாமல் காடழித்து நாடு செய்தீர்
வெற்றிடங்கள் தோறும் கட்டடங்களாக்கி,
மழைக்கும், நிழலுக்கும் பரிதவித்தே ஏங்குகின்றீர்,
பட்சிகள் கூடற்றுப் பதற
எமை வெட்டிச் சாய்க்கும் போதினில்
சிறு செடியாவது நடுவதற்கு உமக்கு மனம்
ஏகாதோ, மனச் சாட்சி வதைக்காதோ....??
மனித உயிர் மலினப் பட்ட பூமியில்
என் குரலோ சபையேறும்…..!!!
மனதில் வைப்பாய் மானிடனே
ஆண்டு திளைக்க இப்பூமி உம் முன்னோர்
தரவில்லை உம் பிள்ளை உமக்காய்
விட்டிருக்கும் வாடகை மண்....!!!
ஆக்கத் தான் ஆகாதெனிலும்
அழிக்காமலேனும் கொடுத்திடு அவர் வசம் !!!
Subscribe to:
Posts (Atom)