skip to main | skip to sidebar

க-விதை . . .

உயிரும் மெய்யும் ஒன்று சேர்ந்தால் பிறக்கும் முதல் எழுத்து போன்று .. மனதும்.. மொழியும் சேர்ந்தால் பிறக்கும் விதை.. கவிதை! என் க-விதைகள் இங்கே... உங்களுக்காக!

Saturday, August 21, 2010

மின்னல் போல் மறைந்தனையே..!

செல்லமாய்ச் சிணுங்கிப் பின்
ஆரவாரத்துடன் பெருகிய மழையின்
தளுவலில் பூரித்துப் பூத்த பூமியில்
கிளர்ந்த மணமாய்,வாசம் வீசிடும்
நாம்பேசி முடித்த வார்த்தைகள்....!

எங்கும், எதிலும் சூன்யம் நிறைந்து
தொலைத்து விட்ட பால்யம் தேடி
அலைக்கழிந்திருந்த கணமொன்றில்
தனிமை நீக்கிப் பெருமழையாய்
அன்பைச் சொரிந்தே படர்ந்திட்டாய்
அறுக்கவியலாக் கொடி யானாய்.

சிலிர்த்துச் சிரிக்கும் செடி தாங்க
மண்ணுள் மறைந்த வேரானாய் - என்னை
வேறாய் நினைக்காமல்
மறைந்து நின்று உரமானாய்
வரவு வேண்டிக் காத்திருக்க
மின்னலாய் வந்தாய் ஜன்னல் வழி
இறுகப் பற்றிப் பூட்டி வைத்தேன்
எனக்கே எனக்காய் என்னுள்ளே.....!

உனது வரியில் எனைக் கண்டு
எனது எழுத்தில் உனை யேற்றி
கரையும் நாளைக் கழித்திருந்தேன்,
தேட முடியாப் பெருவெளியில்
மின்னி மறைந்து போனாயே
தொலைத்து விட்டுத் தேம்புகிறேன்
மீண்டும் வருவாய் என நம்பி
காலம் கழித்து வாழ்கின்றேன்........!
Posted by MANCHUBASHINI at 11:26 PM 9 comments

Saturday, August 14, 2010

பிச்சை.

குளிரூட்டி வண்டிக்குள் ஜன்னல்கள் பூட்டி,
“அப்பப்பா, என்ன வெயில்” அலுத்தப்டி
சமிக்ஞையில் தரித்த போதில்
வயதான ஏழையின் கோலம் கண்டு..
மனதையும் பூட்டினேன் இரக்கமற்று.

சிக்கும் சிடுக்குமாய்க் கலைந்த கேசம்
கன்றிக் கறுத்து ஒட்டிய கன்னங்கள்
சிவந்து கலங்கிய பூஞ்சை விழிகள்
வெடித்துக் காய்ந்துலர்ந்த உதடுகள்
நீரின் தீண்டுதலற்ற அழுக்கு உடை
சணலால் இறுக்கப்பட்ட செருப்புகள்
கண் கொண்டு காணவே அச்சப்பட்டு,
அமர்ந்திருந்தேன் எங்கோ பார்த்து.....!

முணுமுணுப்புடன்
அடுத்த வண்டிக்கு நகர்ந்திட
ஜன்னல் இறங்கவில்லை அங்கும்
குரூரமாய் திருப்தியுடன்
விலகிப் போனேன்.
ஆனாலும் ஏழை முகம்
மறையவில்லை மனதை விட்டு,
சிந்தனை சிதறியதால்
ஓர் வழிப்பாதையிலே சென்றதனால்
வழி மறித்த காவலன்
கௌரவமாய்ப்பிச்சை கேட்க
துணுக்குற்றேன் ஏழையின் சாபமென்றே....!

மனச்சாட்சி இல்லா மனிதனென்றே
உள்ளுணர்வு வதைத்திடவே
மீண்டும் கண்டால் கொடுப்பதற்காய்
பழைய துணி, செருப்பு எல்லாம்
எடுத்து வைத்தேன்
மனிதம் தேடி எங்கே போனானோ.....?!
இன்று வரை எங்குமங்கு காணவில்லை.
உடன் செய்யாத் தானம்
உறுத்துதெனை எனை ஏழை மக்கள்
காணுகின்ற போதில் எல்லாம்.....!
Posted by MANCHUBASHINI at 11:04 PM 6 comments

Thursday, August 12, 2010

வசந்தத்தை நோக்கிய தவம்.!

என்றோ வசந்தம்
வருமேயென்ற நினைவு
சுமைகளைக் சுகமாக்க
பிரிவும், துயரும்
ஊசிக் குளிரும், கொடும் கோடையும்
பொருளீட்டலில், பொருட்டாகா....!
நிகழ்காலத்தைத் தொலைத்து
தெரியாத எதிர்காலத்துக்காய்ப்
பந்தயக் குதிரைகளாய்
முழு வேக ஓட்டம்....!

எந்திர மனிதரின்
செயற்கைப் புன்னகை
பதில் வேண்டாத
வெறுமை விசாரிப்புக்கள்,
வீர்யத்துடன் வலிகளைக் கொட்ட
மின்னணு வார்த்தைப் பரிமாறல்கள்,
எங்கோ தொலைத்ததை
எங்கோ தேடி,
சொல்லில் வடிக்கவியலா
வலிகளைச் சுமந்து
கதறியழ வோரிட மேயற்று
உள்ளே அழுது, வெளியே சிரித்து...
வதைபடும் மனதை ஓரமாக்கி......!.

வெயிலில் உருகி
குளிரில் உறையும்
இவனிலையறியா
ஊரவர் சொன்னார்
”அவனுக்கென்ன
அவன் பிள்ளை வெளியூரில்.....!”
Posted by MANCHUBASHINI at 3:56 AM 9 comments

பெண்ணே நீ போனதெங்கே.?

பொன்னந்தி மாலை வானவிலின்
வர்ண வளைவில் கண் கூசா
மெல்லொளியாய் வந்திறங்கினாய்...!
கருமை மிகு மேல் வானின்
மின்னற் கொடியின்
இழையொன்றைப் பற்றி யிறங்கி,
காத்திரமாய் வேர்விட்டு
பெருமரமாய்ச் செழித்திட்டாய்...!

அடர் இருள் நெஞ்சத்துள்
விழி வழி புகுந்தே
வெளிச்சமும், வளியும் கொள்
மனையாக்கி சாளரங்கள்
வழி உயிர் கொடுத்து.....
தண்மதிக்காய் ஏங்கிய
அல்லியை முகிழச் செய்தாய்....!

மனதால் உன்னுடன் முயங்கி
விழி களைத்துக் கிடந்த நாளில்,
காரணம் கூறாது,
நினைவடுக்குகளை அழிக்காது
சாளரவழியே பூனையாய்க்
குதித்தோடி விட்டாய்...
இதயச் சுவரெங்கும்
நகக் கீறல்கள்
இருள் கவிகிறது மனக் காடெங்கும்......!
Posted by MANCHUBASHINI at 12:57 AM 2 comments

Sunday, August 8, 2010

ஆடிவேல் நினைவுகள்...!

சிட்டாகச் சிறகடித்து பள்ளி சென்ற காலமது சிறப்பாக ஆடி வேல் விழா நடந்த நேரமது யாருக்குக் கிடைக்கும் நகருக்குள் கிராம வாழ்க்கை.....?

திகட்டத் திகட்ட பால்யத்தின் ஊற்றுக்களை
அள்ளிப் பருகிய ஆனந்த நாட்கள்
சலசலத்துக் காற்றைத் தரும் பேரரசுகள்,
எப்போதும் பூமியைக் குளிர்விக்கும் நிழலுடன்
நூற்றுக் கணக்கில் வான் தொட்ட தென்னைகள்,...

ஆடிவேல் வந்தால் மிகுங் கொண்டாட்டம்
மூன்று நாள் கூத்து முற்றிடும் கை நிறையக் காப்புகளுடனும்,
புரட்டாதிக் கொலுவுக்கு மண் பொம்மை, சொப்புகளுடனும் வரும் உறவுகளின் பரிசுகள் குவிய குதூகலம் இரட்டிப்பாகும் ஆடிவேல் நாட்களிலே...... !

1983, ஆடிவேல் மூன்றாம் நாள் ஏன் வைத்தார் பரீட்சையை.....? அரை மனதுடன் பள்ளி சென்றது அரை நாளுடன் திரும்பத் தானோ.....? திகிலுடன் அப்பா வந்தே குஞ்சுகள் போல் கூட்டிப் போனார்...

அதி கூடிய தீயைக் கண்டது கார்த்திகைச் சொக்கபனைக்குத் தான் காலி வீதிக் கடைகள் பெரு நெருப்பின் கோரப்பிடியில்.... உயர்ந்தெழுந்த தீச்சுவாலைகள் வளவில் பிஞ்சும் குலையும் தாங்கி நின்ற தென்னைகளின் தலைகளைக் காவு கொண்டு பேயாட்டம் போட்டன

என்றுமே கண்டிராத கோவிலின் இரண்டாம் கட்டெனப்படும் கொப்பறா காயப் போடும், எலிகளும் புறா எச்சமும் நிறைந்த இடத்தில் சிறை வைக்கப்பட்ட முயல்களானோம் மாலைகளில் மட்டுமே சந்திக்கக் கிடைக்கும் அண்டை அசல் தோழர்களுடன் சூழ்நிலை விபரீதம் புரியாமல் கதை பேசலனோம்...... முதன் முதலில் பசியறிந்தோம்.....

குலைத் தேங்காய்கள் சிதறுண்டது போலாக வந்தது இனக் கலவரம்...... சில்லுச் சில்லாய் சிதறுகாயாக்கி நம்மையும், எம் குழந்தமையையும் கொன்று தின்று கோரப்பசியாற்றியது.... மகிழ்ந்திருந்த நாட்களுக்குச் சாட்சியாக இதோ ஒரு கிறுக்கலும் இரு பேரரச மரங்களும் கூடவே எப்போதும் அமைதி காக்கும் கல்லான கடவுளர்களும்.....!!!
Posted by MANCHUBASHINI at 1:57 AM 3 comments
Newer Posts » « Older Posts Home
Subscribe to: Posts (Atom)

சமீபத்தில் விதைத்தவை!

Loading...

வருகையின் தடங்கள் என்றும் அழியாத அன்புடன் என்னுள் . . .

வருகையின் தடங்கள் என்றும் அழியாத அன்புடன் என்னுள் . . .

சமீபத்திய பின்னூட்டங்கள்

Loading...

Blog Archive

  • ▼  2010 (23)
    • ▼  August (5)
      • மின்னல் போல் மறைந்தனையே..!
      • பிச்சை.
      • வசந்தத்தை நோக்கிய தவம்.!
      • பெண்ணே நீ போனதெங்கே.?
      • ஆடிவேல் நினைவுகள்...!
    • ►  July (3)
    • ►  June (6)
    • ►  May (9)

Followers

 
Copyright © க-விதை . . .. All rights reserved.
Blogger templates created by Templates Block
Wordpress theme by Uno Design Studio