சிட்டாகச் சிறகடித்து பள்ளி சென்ற காலமது சிறப்பாக ஆடி வேல் விழா நடந்த நேரமது யாருக்குக் கிடைக்கும் நகருக்குள் கிராம வாழ்க்கை.....?
திகட்டத் திகட்ட பால்யத்தின் ஊற்றுக்களை
அள்ளிப் பருகிய ஆனந்த நாட்கள்
சலசலத்துக் காற்றைத் தரும் பேரரசுகள்,
எப்போதும் பூமியைக் குளிர்விக்கும் நிழலுடன்
நூற்றுக் கணக்கில் வான் தொட்ட தென்னைகள்,...
ஆடிவேல் வந்தால் மிகுங் கொண்டாட்டம்
மூன்று நாள் கூத்து முற்றிடும் கை நிறையக் காப்புகளுடனும்,
புரட்டாதிக் கொலுவுக்கு மண் பொம்மை, சொப்புகளுடனும் வரும் உறவுகளின் பரிசுகள் குவிய குதூகலம் இரட்டிப்பாகும் ஆடிவேல் நாட்களிலே...... !
1983, ஆடிவேல் மூன்றாம் நாள் ஏன் வைத்தார் பரீட்சையை.....? அரை மனதுடன் பள்ளி சென்றது அரை நாளுடன் திரும்பத் தானோ.....? திகிலுடன் அப்பா வந்தே குஞ்சுகள் போல் கூட்டிப் போனார்...
அதி கூடிய தீயைக் கண்டது கார்த்திகைச் சொக்கபனைக்குத் தான் காலி வீதிக் கடைகள் பெரு நெருப்பின் கோரப்பிடியில்.... உயர்ந்தெழுந்த தீச்சுவாலைகள் வளவில் பிஞ்சும் குலையும் தாங்கி நின்ற தென்னைகளின் தலைகளைக் காவு கொண்டு பேயாட்டம் போட்டன
என்றுமே கண்டிராத கோவிலின் இரண்டாம் கட்டெனப்படும் கொப்பறா காயப் போடும், எலிகளும் புறா எச்சமும் நிறைந்த இடத்தில் சிறை வைக்கப்பட்ட முயல்களானோம் மாலைகளில் மட்டுமே சந்திக்கக் கிடைக்கும் அண்டை அசல் தோழர்களுடன் சூழ்நிலை விபரீதம் புரியாமல் கதை பேசலனோம்...... முதன் முதலில் பசியறிந்தோம்.....
குலைத் தேங்காய்கள் சிதறுண்டது போலாக வந்தது இனக் கலவரம்...... சில்லுச் சில்லாய் சிதறுகாயாக்கி நம்மையும், எம் குழந்தமையையும் கொன்று தின்று கோரப்பசியாற்றியது.... மகிழ்ந்திருந்த நாட்களுக்குச் சாட்சியாக இதோ ஒரு கிறுக்கலும் இரு பேரரச மரங்களும் கூடவே எப்போதும் அமைதி காக்கும் கல்லான கடவுளர்களும்.....!!!
Sunday, August 8, 2010
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
இனிமையாய் படிக்க ஆரம்பித்த இந்த பதிவு, முடிவை நெருங்கும் போது, இதயத்தை அப்படியே பிசைந்து போட்டது....
மிக மிக நெகிழ்வான பதிவிற்கு வாழ்த்துக்கள் மன்சுபாஷினி....
கோபி தங்கள் வருகைக்கும் கருத்துப் பதிவுக்கும் நன்றி தோழா...!
அழியா அன்புடன்
மஞ்சுபாஷினி
Post a Comment