skip to main | skip to sidebar

க-விதை . . .

உயிரும் மெய்யும் ஒன்று சேர்ந்தால் பிறக்கும் முதல் எழுத்து போன்று .. மனதும்.. மொழியும் சேர்ந்தால் பிறக்கும் விதை.. கவிதை! என் க-விதைகள் இங்கே... உங்களுக்காக!

Saturday, June 26, 2010

வாழ்க்கைச் சக்கரம்.

கிடையாய்க் கிடக்கவன்றே
கடையப்பட்டது சக்கரம்,
நிமிர்ந்து நின்றோடிடத் தான்
நிகழ்ந்திடும் மாற்றமே...
அச்சாணிப் பிடியில் சில்லும்
அசைந்திடல் போல,
நம்பிக்கையைப் பிடியாக்கி
நகர்த்திடு காலச் சக்கரத்தை.

ஓரிடத்தில் தரித்திடல் தேக்கமேயென
மேலும் கீழுமாய் உருளும்
சக்கரம் சொல்லிடும்,
வாழ்வின் நியதியும் அது போலாமே
உயர்வு தாழ்வு அடிக்கடி நிகழ்ந்திடும்.

கை ஏந்தி நின்றவர்
கை காட்டிப் பேசலும்,
உச்சத்தில் இருந்தவர்,
உடைந்து போய் வீழலும்
காலச் சுழற்சியாம்,
மாற்றமே மெய்யிங்கு
அறிவீர்காள் மேன்மக்காள்..!

முடிந்த கதை பேசியிங்கு
பயனில்லை கேட்பீர்காள்,
நம்பிக்கை கொண்டே
நாட்களைக் கழித்திடுங்கால்
சக்கரம் மேற் செல்லும்
மேன்மையும் கிட்டிடும்
வாட்டிடும் வாதைகள்
பொடிப் பொடியாகிடும்
அச்சாணியாய் நம்பிக்கையோடு
பொறுத்திருப்பீர் அது வரை ....!
Posted by MANCHUBASHINI at 11:06 PM 2 comments

Saturday, June 19, 2010

வாழ்க்கைப் பாடம்.


பிறப்பின் முன்பும் அறியோம்,
இறந்த பின் ஆவதும் அறியோம்,
இருப்பது சொற்ப நாளே
அது மட்டும் திண்ணமாகும்.

ஓடும் புளியம் பழமுமாய்,
வாழ்ந்திடல் கடினமிங்கே,
பற்று வைத்துப் பாசம் காட்டி,
பின் ரத்த விளாறாய்
இதயம் பிளக்கத் தோன்றிடும்
இழப்புக்கெல்லாம் காலமே
மருந்தாம் இங்கே,

கரைகின்ற நாட்களிலே உடல்
காயமது மறைந்துவிடும்
கோபத்தில் சிந்திய வார்த்தைகளும்
நீர்க்கக் கூடும் - தொலைத்த
இழப்புக்கள் மீண்டு வரா,
அனுபவத்தில் நோப்பட்டுத்
தெரிந்ததனால் சொல்கிறேன்....
இன்று கொட்டி நாளை அள்ளி
இன்று முறுகி நாளை சிரித்து,
வதை படும் மனங்களுடன்
எதற்கிந்த நோக்காடு,

வார்த்தைகளைச் சிந்தாதீர், பின்
சிந்தித்துப் பயனில்லை,
நாளை என்பது நிச்சயமாய்
நம் கையில் இங்கில்லை,
இன்றே செய்வோம்
அதை நன்றே செய்வோம்
வாருங்கள் தோழர்களே.
Posted by MANCHUBASHINI at 1:21 AM 2 comments

Monday, June 14, 2010

தயை கூர்ந்து மன்னியுங்கள்…..!!!

புள்ளினமே, எறும்புகளே
வாசலிலே கோலமில்லை
உம் பசியாற்றவிங்கு.....
என் மக்கள் வீதியிலே,
பல மனைகளில்
முற்றமென்ற ஒன்றில்லை……!

பழங்கோதும் அணில் பிள்ளாய்,
வௌவாலே, கிளிகளே
வீட்டினுள் பொன்சாயில்
உமக்கான கனிகளில்லை,
குந்தியிருக்க நிலமற்ற
என் மக்கள் மரமெங்கே வளர்ப்பதிங்கு….!

அன்னமிட வழியில்லைக் காக்கையரே,
பலருக்கு அவசரகதி உணவு
சிலருக்கு அரிசியில்
அவர் பெயரே இல்லை,
பட்டினியால் வாடுகிறார்…!

வாசல் வரும் ஆவினமே
களனித் தண்ணி கேளாதீர்.!
என் மக்கள் வரிசையிலே,
கோப்பைத் தேனீருக்காய்த் தவமிருக்க
பலருக்கு நேரமில்லை,
ஓடுகிறோம் சக்கரமாய்....!

தேன் தேடும் பூச்சிகளே
வந்திங்கு ஏமாந்து போகாதீர்,
புறாக் கூட்டில் வாழும் மக்கள்
பூச் செடிகள் வளர்ப்பதெங்கே.!?
பூப் போன்ற பிஞ்சுகளைக்
காப்பாற்ற வழியற்ற
என் மக்கள் பூச் செடியா வளர்ப்பரிங்கே..!?

பணம் தேடும் பயணத்தில்,
உம்மை ரசித்திடவும்,
உம் பசி போக்கிடவும்
இங்கெதற்கும் நேரமில்லை..!!!
இழப்புக்கள் நினைத்தழும்
என் மக்களுக்கோ
எதிர்காலம் பெருமிருட்டாய்…..…!!!

குறுகிப் போன மனங்கள் போல்
நீங்களும் அரிதாகிப் போவீரோ,
பாசமற்ற சொந்தங்கள் போல்
நீங்களும் ஒதுக்கி வெறுப்பீரோ..?
நாம் வேண்டுமென்று செய்யவில்லை
எம் நிலமை புரிந்து கொள்வீர்
தயை கூர்ந்து மன்னிப்பீர்…!!!
Posted by MANCHUBASHINI at 4:20 AM 2 comments

Thursday, June 10, 2010

இறுதித் துணை.

கரை வந்து மீளும் அலைகளாய்
காற்றில் அலையும் மேகங்களாய்
எதையோ தேடிக் கொண்டே
இருக்கும் மனதும்....!!!

பயணிகளில் சிலர்
இறுதி வரை வருவார்களென
மதியற்று எண்ணி,
அன்புடன் அருகமர்த்திப்
பல கதைகள் கூறி,
அவர் நோவைத் தான் வாங்கி
தன் சுமை மறந்திருந்த
அருந் தருணம் மறந்ததுவும்
ஏனென்று தெரியவில்லை
அறிந்திடவும் விரும்பவில்லை,

நாவினால் விஷம் தடவி
வார்த்தைகளில் நாண் ஏற்றி
பாணமதை ஏவியதில்
உன் குறி தப்பவில்லை,
வீழ்ந்தது அன்பெனும் சாம்ராஜ்யம்,
இல்லையில்லை அப்படி
நீ சொல்லி வந்த உன்
வெளி வேஷம்.

விரல் கொண்டே
விழிகள் குத்தி,
வடிந்த குருதி நிறம்
பார்த்த உன்னிடம்
கற்ற பாடம்
வேறெங்கும் கற்றதில்லை,
சென்றொழிந்த காலமெண்ணி
வீண் பொழுது போக்க வெட்கம்,

கூர் நகங்களின் கிழிப்புக்கள்
இதயச் சுவரெங்கும்,
விரிசல்களாகவும், வெடிப்புக்களாகவும்
உன் இடத்தில் இறங்கிட,
விட்டுச் செல்லும் வடுக்கள்
துணையாய் இறுதிவரை.
Posted by MANCHUBASHINI at 12:35 AM 3 comments

Monday, June 7, 2010

முற்றத்து மா மரம்.

புது வீட்டின் முற்றத்தில்
அமைதியாய் அழகாய்
கிளை பரப்பி பச்சென
நின்றது அந்த மாமரம்,

கண்டதுமே ஊஞ்சல் கட்டி
ஆடி விடத் துடித்து மனது,
ஊஞ்சலில் கிழிருந்து காலுன்னி
மேலெழ வயிற்றுக்குள்
கிளம்பும் ஜிவ்வென்ற உணர்வு
பயமா,பரவசமா........?


நீ முந்தி, நான் முந்தி எனச் சண்டை
போட்ட நாட்களும், முதுகுப் புறம்
நீயேறி நிற்க இருவராய்க்
களித்திருந்த நாட்களும்
இன்றும் அம் மரம் போலவே
அடிமனதில் பசுமையாய்..!!

மாம் பூவின் நறுமணத்தில்
மனம் தொலைந்த காலங்கள்,
பிஞ்சுகளை ஊஞ்சலில் போய்
எட்டித் தொட்ட நேரங்கள்,
முற்றமுதல் பறித்ததனை
அடிமரத்தில் குத்தி
யாருக்குந் தெரியாமல்
கடித்துண்ட போதெல்லாம்,
அம் மாமரமும் அதைத் தழுவிச்
செல்லும் காற்றுமே சாட்சியாய்,

காலை தோறும் தனியாக
மரத்திலெ வந்து குந்திக்
கூவிடும் குயிலுக்குக்
குரல் கொடுப்பதுடன் விடிந்தன
அழகான நம் நாட்கள்,

அணில் விரட்டி, அது கோதும்
பழம் திருடி நாமுண்ண
எமைப் பார்த்து தலையசைத்துச்
சிரிக்கும் மரம் நம்முடனே,

ஊஞ்சலிலே அமர்ந்திருந்து
பாடத்தை அசை போட்ட
போதெல்லாம், மரமும் அசையாமல்
நின்று தானும் கேட்பதாய்
பாவனை செய்வதை
ரசித்திருந்தோம் –

நம் பல ரகசியங்கள்
நமக்கும் மரத்துக்குமே
இன்றுவரை தெரிந்ததாய்..!!!

அங்கு நானும் இல்லை,
நீயும் இல்லை, மரம் மட்டும்
தனித்திருக்கும்,
இருக்குமென்று தான் நினைக்கிறேன்
உன்னையும், என்னையும் போல்
இரு சகோதரிகள் அதில் ஊஞ்சல் கட்டி
ஆடக் கூடும்,
நம் போலவே
அம்மரத்தை நேசிக்கக் கூடும்,
நேசிப்பார்களென்று தான் நினைக்கிறேன்.
Posted by MANCHUBASHINI at 12:27 AM 9 comments

Thursday, June 3, 2010

மழையும் நானும்.

கனத்த போர்வைக்குள் சோம்பலுடன்
பூனை போல் உடல் சுருட்டி கதகதப்பை
சுகித்திருந்தேன், பேய் இரைச்சலுடன்
இரண்டாவது தினமுமாய் அடை மழை,
வெள்ளக் காடான வீதி வழி
போகத் தேவையில்லை,
அடுக்களையில் அடுக்கடுக்காக எல்லாம்,
மழை தீரும் வரை அவை தீரா...!

சாளரத்தின் வழியே என் பெயர் சொல்லி
அழைப்பது யார்....?
மெல்ல அடியெடுத்து அருகே சென்றேன்.......

மழையின் காதலியே,
மனம் விட்டுப் பேசலாமா....?

ஓ.... என் இன் மழையே, வா.... வா...!!!
எனக்கு உனைப் பிடிக்கும்,
என்றாலும் இன்றுடன் இரண்டு நாள்
விட்டுப் போக மனமில்லையோ ?

தோழியே நான் என் செய்வேன்,
தூரத்தில் ஓரிடத்தில் பொழியப் பணிக்கப் பட்டேன்
போகு முன்னே இடி, மின்னலை அனுப்பினேன்
ஏழை விவசாயி வாய்விட்டுக் கதறினான்
கதிரறுக்கும் சமயத்தில் ஏன் வந்தாய் இங்கென..!

காற்றின் துணைகொண்டு
ஓடினேன் மற்றோரிடம்
மரங்களே வீடுகளாய், வானமே கூரையாய்
பல ஆயிரம் மக்கள் நிர்க்கதியாய், மனம் வெதும்பி
சிறு துளியாய் அவர்கள் மீது
கண்ணீர் சிந்தியே நகர்ந்தேன் அங்கிருந்து....!

இனியும் தாங்காது சூலின் பாரம் என
இறக்கிவிட எத்தனிக்க
களிப்புடன் பொழுது கழிக்க
மைதானமெங்கும் திரள் மக்கள்
போ மழையேயெனப் பெருங் கூப்பாடு,
தாங்கவில்லை அவர் கூச்சல்
ஓடோடி வந்தேனிங்கு....!

பல நாள் பாரம் இறக்கிவைக்க
வேண்டுமல்லோ,
ஓட்டைக் கூரை வீடுகளில்,
பாத்திரங்கள் மழை நீர் சேர்க்கும்,
அடுத்த வேளை சமையலுக்கு
விறகெல்லாம் ஈரமாய்,
உலர் ஆடை இருக்காது மாற்றிட
பல பிஞ்சுக் குழந்தைகளுக்கு,
தெருவோரப் பிச்சைக்காரனுக்கோ
ஒதுங்க இடம் தெரியாது,
அன்றாடங் காய்ச்சிகளுக்கு
கூலியும் இருக்காது,
சிறகு தூக்கிப் பறக்க
பட்டாம் பூச்சிகள் தடுமாறும்,
குஞ்சுகளுக்கு உணவு தேட
பறவைகளும் துணியாது,
சுமூக நிலை சீர்கெடும்,
இருந்தாலும் கவலையில்லை....!

என் தப்பு இதிலில்லை,
வராவிட்டால் பெருங் குற்றம்
ஆகையினால் வந்துவிட்டேன்
பொறுத்தருள வேண்டுமெனை,
பல நாள் சுமையிது
கொட்டித் தீர்த்துப் போவேன் நான்...!

ஒழுகாத மாடி வீட்டில்
ஒய்யாரமாய் சன்னல் வழி
சூடான தேனீருடன்,
சிற்றுண்டி கையிலேந்தி
எனை ரசிக்கும் உன்னைப் பார்க்க
வந்ததிலே பேருவகை...!

என்னை வேண்டிடும் இடம்
சென்று பொழியும் வரை
சுமந்து செல்லக் காற்றுக்கோ
முடியவில்லை, எனக்காய்
ஏங்கும் மக்கள் பல்லாயிரம்
பேரிருக்க, தலை சுற்றி
தறி கெட்டுத் திசை மாறி
இங்கேயே தங்கி விட்டேன்,
என்னால் நேர்ந்த அழிவுக்கு
யாரிடம் கேட்பேன் மன்னிப்பு,
பிராயச்சித்தமாய் இன்னும்
ஓர் தினம் அழுதுவிட்டுப் போகிறேன்....!

அவரவர் தலைவிதிக்கு நான் என்ன
செய்வது, உன் தோழி நான்
உன்னைப் போல் எனக்கும்
மற்றவர் பற்றிக் கவலை கொள்ள
நேரமே இல்லை.....!!!
Posted by MANCHUBASHINI at 12:51 AM 6 comments
Newer Posts » « Older Posts Home
Subscribe to: Posts (Atom)

சமீபத்தில் விதைத்தவை!

Loading...

வருகையின் தடங்கள் என்றும் அழியாத அன்புடன் என்னுள் . . .

வருகையின் தடங்கள் என்றும் அழியாத அன்புடன் என்னுள் . . .

சமீபத்திய பின்னூட்டங்கள்

Loading...

Blog Archive

  • ▼  2010 (23)
    • ►  August (5)
    • ►  July (3)
    • ▼  June (6)
      • வாழ்க்கைச் சக்கரம்.
      • வாழ்க்கைப் பாடம்.
      • தயை கூர்ந்து மன்னியுங்கள்…..!!!
      • இறுதித் துணை.
      • முற்றத்து மா மரம்.
      • மழையும் நானும்.
    • ►  May (9)

Followers

 
Copyright © க-விதை . . .. All rights reserved.
Blogger templates created by Templates Block
Wordpress theme by Uno Design Studio