skip to main | skip to sidebar

க-விதை . . .

உயிரும் மெய்யும் ஒன்று சேர்ந்தால் பிறக்கும் முதல் எழுத்து போன்று .. மனதும்.. மொழியும் சேர்ந்தால் பிறக்கும் விதை.. கவிதை! என் க-விதைகள் இங்கே... உங்களுக்காக!

Sunday, May 30, 2010

தவிப்பு....!!!


உயிரின் துடிப்பு மிக வேகமாகிட
நேரமுள் முன்னரிலும்
மெல்ல நகருவதாய்
இன்ப வேதனையிலகப்பட்ட
மனது குறை கூறும்.

இதயத் துடிப்பை இது நாள்வரை
கண்டு கொள்ளாதிருந்தேன்;
உன் இதயம் எனக்காய்த்
துடிப்பதாக நீ சொன்ன நாளிலிருந்து,
எனதுயிரும் சேர்ந்து துடிப்பதை
சொல்வதற்காய்த் தவிக்கிறேன்.

பிரிவு வல்லிய நோவைத் தந்தாலும்
நம் காதலைப்
பலமடங்கு கூட்டியத்தைச் சொல்ல
என் கணனிப் பலகையில் எழுத்துக்களைத்
தேடிக் களைக்கிறேன்..!!!

சிறு புன்னகையாலும்
ஓர விழிப் பார்வையாலும்
விழுங்கப் போவது என்னையும்
உனக்காகத் தேடிப் பொறுக்கிய
வார்த்தைகளையும் என்பது
சர்வ நிச்சயமாகத் தெரிந்தும்,
நாட்காட்டியை இரவிலேயே கிழித்து விட்டு
ஒத்திகை பார்க்கிறேன் புதுமையான தவிப்புடன்
.
Posted by MANCHUBASHINI at 11:03 PM 2 comments

Thursday, May 27, 2010

நீங்காதுன் நினைவலைகள்....!

சேர்ந்திருந்த காலங்கள்
பனியாய் உருகியதே,
நீண்டிருக்குந் தனிமையதில்
வதைபடுது என் மனமே,

மின்னலென விழி வெட்டி
வீழச் செய்தெனைச் சாம்பலாகிச்
சென்றனையே, மின்னலில்
பிறந்த காட்டுத் தீயிலென்
உயிர் பற்றியெரியுதடி.

ஊருக்குட் புகுந்த சமுத்திரமாய்
ஆக்கிரமித்தவோர் பொழுதில்
கண் சொருகிக் கனாக் கண்டதென்
பேதை மனம் சுருட்டியள்ளிச்
செல்வாயென, கசக்கிப் போட்ட
பாதகியே துருவானதெந்தன் நெஞ்சம்.

உனக்காய் நட்டு வைத்த
மல்லிச் செடி மதாளித்துப்
பூக்குகையில், வெண்பூக்கள்
பார்த்தென்னை ஏளனமாய்ச் சிரிக்குதடி
கொம்பற்ற கொடியாய்
வீழ்த்தினாயே எனை மண்ணில்.

நினைவுகளை அழித்து விட
நிலையான வரம் வேண்டித்
தொழுகின்றேன், ஆனாலும்
தாய்மடி தேடி மீளும் ஆலம் விழுதாய்
வேர் விடுகிறதே பலமாய் என் செய்வேன்...!!!
Posted by MANCHUBASHINI at 11:51 PM 1 comments

Monday, May 24, 2010

கோடை காலம்.


வறண்ட பூமிக்கு வந்தது பூ மழை ,
இறந்து கொண்டிருந்த கலங்கள்
உயிர் கொண்டன அந்நாளில்,
சட்டென்று துளிர் விட்டது மனசு..!

அன்பெனும் நீர் வார்ப்பில்
சோலையும் செழித்திட,
படபடத்த பட்டாம் பூச்சிகளின்
சிறகசைப்பில் லயித்திருந்த
கணங்களிலே பசி தூக்கம் மறந்தது,
பெரு மாயமன்றோ நிகழ்ந்தது....!

நரம்புகளிலும் நாளங்களிலும்
அறுத்தெறிய முடியாத
கொடியாகப் பற்றிப் படர்ந்து
உன் இருப்பை உறுதி செய்தாய்.

மழைக்காலம் மாறிவிட,
வசந்தகாலம் வந்துதிக்க
சோலையெங்கும் வண்ணப் பூக்கள்,
கொடிப் பூக்களின் வாசம்,
குருதியிலும் சுவாசத்திலும்
விரவி நிற்க, புதிதாய் பிறந்ததாய்
இருவருமே கண்டு கொண்டோம்
உலகமே அழகாக,
ரசித்திருந்தோம், சுற்றம் மறந்தோம்.

கோடை வருமென
கிஞ்சித்தும் எண்ணவில்லை...!
கோடையிடையாய்
நீயே வந்தாய்....!

எனக்குள், நீ வளர்த்த காதல் அழிய,
உன்னைப் பெற்றவர்கள் அழியாமல் தடுக்க
இனிப்புப் பூச்சிட்ட கச்சல் மருந்தை
வருத்தியெனை விழுங்க வைத்தாய்...!

இருள்கவிந்த வதனம் தாங்கி,
கை பிசைந்து, கனியிதழ் துடிக்க
வார்த்தை தேடி நீ நிற்க
மனசுக்குள்ளே தொடங்கிய
கோடை மழையால்,
கலங்கள் யாவும் சில்லாய் சிதறிட,
கொடியின் வேரை
இழுத்துப் போட்ட
வேதனையில் நீ துடிக்க...,

உனை வதைக்க மனமின்றி,
தொடர் கோடையை ஏற்றுக் கொண்டேன்.
மீண்டும் காலங்கள் மாறக் கூடும்,
கருகி விட்ட சோலையது
துளிர்க்குமென்பது நிச்சயமில்லை....!!!
Posted by MANCHUBASHINI at 10:33 PM 0 comments

Wednesday, May 19, 2010

தொலைந்தது என் முகமூடி.


முகமூடிகள் இத்துப் பொய்த்துப்
போனவோர் கணத்தில்
வக்கிர மனங்களின்
உக்கிரம் தாங்காது
மரணிக்கத் துடித்து
ஊசலாடும் மனதை
பாழும் பணமும்
பசப்பான பாசமும்
கட்டிப் போட்டுப் பேரம் பேச,
பந்தயப் பொருளான
சின்ன உயிர்
நொடிக் கொருக்கால்
செத்து மீளும்,

மனதறிந்து வருகை தந்த
காலதேவன் முகத்திரை
பிய்த்தெறிந்து முழுமனதாய்
ஏற்றுக் கொள்ள

கோரப் பற்கள் கொண்ட
முகமூடி பூண்டு குதறிய
சில முகங்கள் தாம்
தொலைத்து விட்ட அனுதாப
முகமூடிகளைத் தூசுதட்டி
அவசர கதியில் மாட்டிக் கொண்டு
அடுத்த கட்டக் காட்சிக்கு மாறும்.

பேரண்டப் பெருவெளியில்
சஞ்சரிக்கும் என் வசம் இல்லை
இப்போ முகமூடி..!
Posted by MANCHUBASHINI at 1:39 AM 4 comments

Monday, May 17, 2010

இப்ப எனக்கு வேணும்..!!!


கேட்டதெல்லாம் வாங்கித் தரும் அப்பா
இப்ப வேணும்……..!
கேக்காமலே உண்ணத் தரும் அம்மா
உடனே வேணும்….!
செல்லச் சண்டை போட்டு ரொம்ப
நாளாப் போச்சு,
ஒளிச்சு விளையாடியது போதும்,
சின்னக்காவும் பெரியக்காவும்
தோற்றேன் நானே வா… வா…!

பள்ளிக்கூடம் மீண்டும் போக
கொள்ளை ஆசை எனக்கு…!
போடச் சட்டை, சப்பாத்து வாங்கித் தரும்
மாமாவையும் காணோம்…!


அம்மா அடிக்கும் போது அத்தை மடியே தஞ்சம்
ஆமி மாமா கூட்டிப் போன,
அவவைத் தேடித் தேடியே
கண்கள் சோர்ந்து போச்சு..!
சொன்ன கதையைத் திரும்பச் சொல்லும்
தாத்தா கூட இல்லை...!
தட்டிக் கொடுத்துத் தூக்கம் ஆக்கும்
பாட்டி எங்கு போனா…??

”ஆவலுடன் தேடுகிறோமில்”
என்னப் போலவே ஒரு
சுட்டிப் பையன் படமிருக்காம்,
ஒரு அக்கா வந்து சொன்னா,
என் பெயர் என்ன
என்று அவவும் என்னைக் கேட்டா,

அம்மாவுக்கு “கண்ணா”, அப்பாவுக்கு “செல்லம்”,
தாத்தா, பாட்டி சொல்லும் பெயர் “ராசா, கடவுள்”,
அந்தப் பெயர் எதுவும் அதில் இல்லை எண்டு
சொல்லி விட்டுப் போனா.

அகதிச் சிறுவன், அநாதைப் பையன்
என்றும் இப்ப என்னைச் சொல்லினம்
அந்தப் பெயர் இருக்கா
என்று கேக்க வேணும் அவவிடம்...!

இப்ப எனக்குத் தெரிஞ்சதெல்லாம்
பசி, தூக்கம் மட்டும் தான்
அதுக்கெண்டாலும் ஒரு
வழி பண்ணுங்கோவன்
யாரெண்டாலும் நீங்கள்…..!!!
Posted by MANCHUBASHINI at 6:07 AM 6 comments

Saturday, May 15, 2010

தவமிருக்கிறோம் நாம்.


நெடிதுயர்ந்து வான் தொடும்
கட்டிடங்களின் வரிசைகளிலும்
கரு நாகமாய் நீண்டு நெளியும்
சாலைகளோர பகட்டான
மின் கம்ப நேர்த்தியிலும்,
மூன்று நிமிடங்களுக் கொன்றாய்
உயரும் விண்ணூர்திகளிலும்
பரந்து விரிந்த நீலம்
குடித்த கடற் பரப்பிலும்,
மனம் மயங்கிய நாட்கள் போயின,

எதிலுமே பற்றற்றுக்
கனவுகளைப் பாலை நிலப்
புழுதியுடன் கரைத்த படி
மணற் துணிக்கை அள்ளி வரும்
அனல் காற்றின் வெம்மை சுகித்து
கண்கள் கசங்கி, வியர்வை குளித்து
நாட்களும் தவமிருக்கின்றன - என்னுடன்
ஆவலாய் உனைக் காண….!!!
Posted by MANCHUBASHINI at 5:50 AM 12 comments

Wednesday, May 12, 2010

வேண்டும் உன் நட்பு...!

திருவிழாவில் தொலைந்திட்ட
குழந்தையாய் நின்றவோர் நாள்,
கரம் பற்றி வழி சேர்த்தாய்
வாழ்த்திடவோர் வார்த்தையில்லை.

அன்பை விலை பேசாக்
காலைச்சுற்றும் குட்டி நாயாய்
சுற்றுமுன் நினைவுகளைப்
பொத்தி வைத்து அசைபோட
சொல்லவொண்ணா இன்பம் பொங்கும்.

வலிகளுக்கோர் வடிகாலாகத்
தோள் கொடுத்தாய் தோழனாக,
உவமையற்ற கவிதை வரியாய்,
பச்சென பதிந்து, மனத்தினிடை
வேரூண்டிச் செழித்திட்டாய்...!

ஆழமான அன்பினாலே
அதட்டிடும் போதில், அருண்டு சுருளுமெனை, அரவணைப்பாய் தாய் போலன்பாய்
ஆயுள் வரை வேண்டுமுந்தன்
ஆத்மார்த்தமான நட்பு...!
Posted by MANCHUBASHINI at 11:01 PM 2 comments

Monday, May 10, 2010

நினைவுகளில் கரையும் நிகழ்காலம்....!




ஆழ்துயில் கனவாய்
நிகழ்ந்தவை மறந்திடும்
எத்தனிப்புக்கள் தோல்வியுற,
நினைவுகளின் துரத்தல்களில்
திணறிக் கண்மூடிக் கிடப்பதே
பெரும்பாடாய்.....!

இருள் விழுங்கிச் சிவக்கும்
அதிகாலைச் சூரியனும்,
மணியோசையுடன் போட்டிபோடும்
புள்ளினங்கள் குரலிசையும்,
மண்மணமும், மென் காற்றும்,
மழலையும், மணாளனும்
மட்டுமே போதுமென்று
பல நேரம் மனமெண்ணும்,
பொல்லாத உலகத்தில்
இவைமட்டும் போதாவே.....!

பருவமாற்றப் பட்சிகளை
அலட்சியப் பார்வைகள் சிதைக்கா,
கவனம் யாவும்
முதலைக்கோ, அலைக்கோ
வசப்படாமல் மீளலாகும்...!

வருகையின் தடங்கள் மட்டும்
அழியாமல் சிலகாலம்
இருக்கும், பறவை எழுந்தபின்
கண நேரம் சிலிர்த்து ஆடிடும்
மரக் கிளை போல......!
Posted by MANCHUBASHINI at 11:34 PM 7 comments

கண்ணாடி உறவுகள்...



தொடரும் மௌனங்களுடன்
கரையும் பொழுதுகள்,
முனகல்கள் வார்த்தைகள்
என உதிர்க்கப்பட்டன
எடுக்கவும் கோர்க்கவும் படாமல்
பல நேரங்களில் அவை
அங்கேயே பரவிக் கிடந்தன.

இரும்புக் கவசமணிந்த
ஒரு உறவும் இங்கில்லை.
கண்ணாடி வார்ப்புக்களாய்
வார்த்தைச் சகதிக்குள் மூழ்கி
சில நேரம் நொருங்கியும்
பல நேரம் விரிசலுற்றும்
இலக்கற்று இழுபட்ட படி....!

விரிசல்களையும் நொருங்கல்களையும்
பிரயாசையுடன் பிறிதொரு
நாளில் அவையே ஒட்டிச் சீர் செய்தன,
இல்லையில்லை அப்படிக்
காட்டிக் கொண்டன,
உருவம் திரும்பக் கிடைத்தாலும்
அதே நெருக்கத்தைத்
தர மறந்தனவா, இல்லை
தர முடியாமல் திணறினவா
சிந்திக்கப் பிடிக்கவில்லை,

எது எப்படியிருந்தாலும்
சிதைந்த போது
வெளியே தூக்கி வீசப்பட்ட
இதயத்தை கூட்டியள்ளி
உள்ளே வைத்துப்
பக்குவமாய் பூட்டி
முகத்திலும் பொய்யாய்ப்
புன்னகையைப் பொருத்தி
மீண்டுமொரு தாக்குதலுக்கு
தளராமல் தயார் நிலையில்.........!
Posted by MANCHUBASHINI at 11:25 PM 5 comments
Newer Posts » Home
Subscribe to: Posts (Atom)

சமீபத்தில் விதைத்தவை!

Loading...

வருகையின் தடங்கள் என்றும் அழியாத அன்புடன் என்னுள் . . .

வருகையின் தடங்கள் என்றும் அழியாத அன்புடன் என்னுள் . . .

சமீபத்திய பின்னூட்டங்கள்

Loading...

Blog Archive

  • ▼  2010 (23)
    • ►  August (5)
    • ►  July (3)
    • ►  June (6)
    • ▼  May (9)
      • தவிப்பு....!!!
      • நீங்காதுன் நினைவலைகள்....!
      • கோடை காலம்.
      • தொலைந்தது என் முகமூடி.
      • இப்ப எனக்கு வேணும்..!!!
      • தவமிருக்கிறோம் நாம்.
      • வேண்டும் உன் நட்பு...!
      • நினைவுகளில் கரையும் நிகழ்காலம்....!
      • கண்ணாடி உறவுகள்...

Followers

 
Copyright © க-விதை . . .. All rights reserved.
Blogger templates created by Templates Block
Wordpress theme by Uno Design Studio