skip to main | skip to sidebar

க-விதை . . .

உயிரும் மெய்யும் ஒன்று சேர்ந்தால் பிறக்கும் முதல் எழுத்து போன்று .. மனதும்.. மொழியும் சேர்ந்தால் பிறக்கும் விதை.. கவிதை! என் க-விதைகள் இங்கே... உங்களுக்காக!

Saturday, August 21, 2010

மின்னல் போல் மறைந்தனையே..!

செல்லமாய்ச் சிணுங்கிப் பின்
ஆரவாரத்துடன் பெருகிய மழையின்
தளுவலில் பூரித்துப் பூத்த பூமியில்
கிளர்ந்த மணமாய்,வாசம் வீசிடும்
நாம்பேசி முடித்த வார்த்தைகள்....!

எங்கும், எதிலும் சூன்யம் நிறைந்து
தொலைத்து விட்ட பால்யம் தேடி
அலைக்கழிந்திருந்த கணமொன்றில்
தனிமை நீக்கிப் பெருமழையாய்
அன்பைச் சொரிந்தே படர்ந்திட்டாய்
அறுக்கவியலாக் கொடி யானாய்.

சிலிர்த்துச் சிரிக்கும் செடி தாங்க
மண்ணுள் மறைந்த வேரானாய் - என்னை
வேறாய் நினைக்காமல்
மறைந்து நின்று உரமானாய்
வரவு வேண்டிக் காத்திருக்க
மின்னலாய் வந்தாய் ஜன்னல் வழி
இறுகப் பற்றிப் பூட்டி வைத்தேன்
எனக்கே எனக்காய் என்னுள்ளே.....!

உனது வரியில் எனைக் கண்டு
எனது எழுத்தில் உனை யேற்றி
கரையும் நாளைக் கழித்திருந்தேன்,
தேட முடியாப் பெருவெளியில்
மின்னி மறைந்து போனாயே
தொலைத்து விட்டுத் தேம்புகிறேன்
மீண்டும் வருவாய் என நம்பி
காலம் கழித்து வாழ்கின்றேன்........!
Posted by MANCHUBASHINI at 11:26 PM 9 comments

Saturday, August 14, 2010

பிச்சை.

குளிரூட்டி வண்டிக்குள் ஜன்னல்கள் பூட்டி,
“அப்பப்பா, என்ன வெயில்” அலுத்தப்டி
சமிக்ஞையில் தரித்த போதில்
வயதான ஏழையின் கோலம் கண்டு..
மனதையும் பூட்டினேன் இரக்கமற்று.

சிக்கும் சிடுக்குமாய்க் கலைந்த கேசம்
கன்றிக் கறுத்து ஒட்டிய கன்னங்கள்
சிவந்து கலங்கிய பூஞ்சை விழிகள்
வெடித்துக் காய்ந்துலர்ந்த உதடுகள்
நீரின் தீண்டுதலற்ற அழுக்கு உடை
சணலால் இறுக்கப்பட்ட செருப்புகள்
கண் கொண்டு காணவே அச்சப்பட்டு,
அமர்ந்திருந்தேன் எங்கோ பார்த்து.....!

முணுமுணுப்புடன்
அடுத்த வண்டிக்கு நகர்ந்திட
ஜன்னல் இறங்கவில்லை அங்கும்
குரூரமாய் திருப்தியுடன்
விலகிப் போனேன்.
ஆனாலும் ஏழை முகம்
மறையவில்லை மனதை விட்டு,
சிந்தனை சிதறியதால்
ஓர் வழிப்பாதையிலே சென்றதனால்
வழி மறித்த காவலன்
கௌரவமாய்ப்பிச்சை கேட்க
துணுக்குற்றேன் ஏழையின் சாபமென்றே....!

மனச்சாட்சி இல்லா மனிதனென்றே
உள்ளுணர்வு வதைத்திடவே
மீண்டும் கண்டால் கொடுப்பதற்காய்
பழைய துணி, செருப்பு எல்லாம்
எடுத்து வைத்தேன்
மனிதம் தேடி எங்கே போனானோ.....?!
இன்று வரை எங்குமங்கு காணவில்லை.
உடன் செய்யாத் தானம்
உறுத்துதெனை எனை ஏழை மக்கள்
காணுகின்ற போதில் எல்லாம்.....!
Posted by MANCHUBASHINI at 11:04 PM 6 comments

Thursday, August 12, 2010

வசந்தத்தை நோக்கிய தவம்.!

என்றோ வசந்தம்
வருமேயென்ற நினைவு
சுமைகளைக் சுகமாக்க
பிரிவும், துயரும்
ஊசிக் குளிரும், கொடும் கோடையும்
பொருளீட்டலில், பொருட்டாகா....!
நிகழ்காலத்தைத் தொலைத்து
தெரியாத எதிர்காலத்துக்காய்ப்
பந்தயக் குதிரைகளாய்
முழு வேக ஓட்டம்....!

எந்திர மனிதரின்
செயற்கைப் புன்னகை
பதில் வேண்டாத
வெறுமை விசாரிப்புக்கள்,
வீர்யத்துடன் வலிகளைக் கொட்ட
மின்னணு வார்த்தைப் பரிமாறல்கள்,
எங்கோ தொலைத்ததை
எங்கோ தேடி,
சொல்லில் வடிக்கவியலா
வலிகளைச் சுமந்து
கதறியழ வோரிட மேயற்று
உள்ளே அழுது, வெளியே சிரித்து...
வதைபடும் மனதை ஓரமாக்கி......!.

வெயிலில் உருகி
குளிரில் உறையும்
இவனிலையறியா
ஊரவர் சொன்னார்
”அவனுக்கென்ன
அவன் பிள்ளை வெளியூரில்.....!”
Posted by MANCHUBASHINI at 3:56 AM 9 comments

பெண்ணே நீ போனதெங்கே.?

பொன்னந்தி மாலை வானவிலின்
வர்ண வளைவில் கண் கூசா
மெல்லொளியாய் வந்திறங்கினாய்...!
கருமை மிகு மேல் வானின்
மின்னற் கொடியின்
இழையொன்றைப் பற்றி யிறங்கி,
காத்திரமாய் வேர்விட்டு
பெருமரமாய்ச் செழித்திட்டாய்...!

அடர் இருள் நெஞ்சத்துள்
விழி வழி புகுந்தே
வெளிச்சமும், வளியும் கொள்
மனையாக்கி சாளரங்கள்
வழி உயிர் கொடுத்து.....
தண்மதிக்காய் ஏங்கிய
அல்லியை முகிழச் செய்தாய்....!

மனதால் உன்னுடன் முயங்கி
விழி களைத்துக் கிடந்த நாளில்,
காரணம் கூறாது,
நினைவடுக்குகளை அழிக்காது
சாளரவழியே பூனையாய்க்
குதித்தோடி விட்டாய்...
இதயச் சுவரெங்கும்
நகக் கீறல்கள்
இருள் கவிகிறது மனக் காடெங்கும்......!
Posted by MANCHUBASHINI at 12:57 AM 2 comments

Sunday, August 8, 2010

ஆடிவேல் நினைவுகள்...!

சிட்டாகச் சிறகடித்து பள்ளி சென்ற காலமது சிறப்பாக ஆடி வேல் விழா நடந்த நேரமது யாருக்குக் கிடைக்கும் நகருக்குள் கிராம வாழ்க்கை.....?

திகட்டத் திகட்ட பால்யத்தின் ஊற்றுக்களை
அள்ளிப் பருகிய ஆனந்த நாட்கள்
சலசலத்துக் காற்றைத் தரும் பேரரசுகள்,
எப்போதும் பூமியைக் குளிர்விக்கும் நிழலுடன்
நூற்றுக் கணக்கில் வான் தொட்ட தென்னைகள்,...

ஆடிவேல் வந்தால் மிகுங் கொண்டாட்டம்
மூன்று நாள் கூத்து முற்றிடும் கை நிறையக் காப்புகளுடனும்,
புரட்டாதிக் கொலுவுக்கு மண் பொம்மை, சொப்புகளுடனும் வரும் உறவுகளின் பரிசுகள் குவிய குதூகலம் இரட்டிப்பாகும் ஆடிவேல் நாட்களிலே...... !

1983, ஆடிவேல் மூன்றாம் நாள் ஏன் வைத்தார் பரீட்சையை.....? அரை மனதுடன் பள்ளி சென்றது அரை நாளுடன் திரும்பத் தானோ.....? திகிலுடன் அப்பா வந்தே குஞ்சுகள் போல் கூட்டிப் போனார்...

அதி கூடிய தீயைக் கண்டது கார்த்திகைச் சொக்கபனைக்குத் தான் காலி வீதிக் கடைகள் பெரு நெருப்பின் கோரப்பிடியில்.... உயர்ந்தெழுந்த தீச்சுவாலைகள் வளவில் பிஞ்சும் குலையும் தாங்கி நின்ற தென்னைகளின் தலைகளைக் காவு கொண்டு பேயாட்டம் போட்டன

என்றுமே கண்டிராத கோவிலின் இரண்டாம் கட்டெனப்படும் கொப்பறா காயப் போடும், எலிகளும் புறா எச்சமும் நிறைந்த இடத்தில் சிறை வைக்கப்பட்ட முயல்களானோம் மாலைகளில் மட்டுமே சந்திக்கக் கிடைக்கும் அண்டை அசல் தோழர்களுடன் சூழ்நிலை விபரீதம் புரியாமல் கதை பேசலனோம்...... முதன் முதலில் பசியறிந்தோம்.....

குலைத் தேங்காய்கள் சிதறுண்டது போலாக வந்தது இனக் கலவரம்...... சில்லுச் சில்லாய் சிதறுகாயாக்கி நம்மையும், எம் குழந்தமையையும் கொன்று தின்று கோரப்பசியாற்றியது.... மகிழ்ந்திருந்த நாட்களுக்குச் சாட்சியாக இதோ ஒரு கிறுக்கலும் இரு பேரரச மரங்களும் கூடவே எப்போதும் அமைதி காக்கும் கல்லான கடவுளர்களும்.....!!!
Posted by MANCHUBASHINI at 1:57 AM 3 comments

Sunday, July 25, 2010

கல்லறைகளின் கதறல்கள்........




ஓங்கி உயர்ந்த மரங்களின் பேயாட்டம் பெருங்காற்றில்,
அடர் கிளை உரசலில் பழுத்த இலையொன்று
ஆயுள் முடிந்ததாய் பரவசித்து, விடுபட்டுத் தலை சுற்றி
மண் நோக்கி விரைந்தது......

சுற்றிச் சுழன்று மண்ணுடன் மக்க வீழ்ந்த இடம்
மாவீரன் விதைக்கப் பட்ட நாற்று மேடை,
பேரானந்தத்துடன் – பிறவிப்
பய னென இறுமாந்தது.....

மந்தகாசமான மாலை வெயில், கல்லறை அருகில்
சருகாகிச் சாக கடைசி ஆசை பூண்டது - அதன் மோனத்
தவத்தைக் குலைத்தது சன்னமான ஒலி,
பலவீன விம்மலுடன் கூடிய அழுகுரல்..
மிக மிக அருகில்
புரியவில்லை அதற்கு......,
மயான அமைதி தொடர்ந்தது மீண்டும்....

உருண்டது நேரம், பகலை விழுங்கியது இரவு,
கல்லறைகளின் அழகை நிலவில் இரசிக்க ஆரம்பிக்கையில்
திடுமெனக் கிளம்பியவோர் அவல ஓலத்தில் திடுக்குற்றது இலை,
இப்போதும் அதே விம்மலும், அழுகையும்
முன்னரிலும் பல மடங்காய், மிகப் பயங்கரமாய், திக்கெட்டிலுமிருந்து.....

தெளிவாக செவியில் அறைந்தது ஒப்பாரிக் குரல்,
ஏக காலத்தில் கல்லறைகளின் கதறல்கள் – “எம் மக்கள், பசியிலும் குளிரிலும், நாற்றத்திலும்
முட்கம்பி வேலிகள் பின்னால்
வதையுறும் அவலம் ஏன் ?”….என

வான் பிளந்தது கதறல், அழுகுரல் ஓங்கியது
எங்கோ பொழிவதற்காய் சென்று கொண்டிருந்த கருமுகில்
கூட்டங்கள் திசை மாறி
அவற்றுடன் முகாரி பாடின....

மழை நீரில் சிக்குண்ட இலை
இடம்மறியபடி இறுதியாக இரந்து

மன்றாடத் தொடங்கியது
படைத்தவனிடம்......
"கல்லறையிலாவது இவர்கள்
அமைதியாகத் துயில
விரைவில் ஏதேனும் வழி செய் ”
Posted by MANCHUBASHINI at 12:13 AM 4 comments

Friday, July 9, 2010

உனக்கான காத்திருப்பு.....!


என்னை எனக்கு உணர்த்தி
உன்னை என்னில் கரைத்துப்
பின் காலி செய்த இதய அறைகள்
வெறிச்சோடிப் போனாலும்
கனம் பல மடங்கானதாய் உயிர் கதற,

இணையைப் பிரிந்த குயிலொன்று
எனக்குமாய்ச் சேர்த்து முடிவற்ற
காற்றில் தன் சோகம் கரைத்து,
கணப் பொழுதில் மாறிவிட்ட
காதலுக்கு கறுப்பு வர்ணம் தீட்டியது.

கனவில் உனைக் காண
உறங்கும் நாட்கள் மாறி,
தினம் மகிழ்ந்து மலர்வதும்
பின் கருகிச் சருகாவதுமாய்
மறந்தும் மூடாத விழிகளுடன்
நெக்குருகி நானிருக்க,

ஒன்றாய் நாமிருந்த
தித்திக்கும் நினைவுப் பொதி சுமந்து
மீண்டும் எமைத் தாங்கும் வரம் வேண்டி
ஒற்றை இருக்கையும்
என்னுடன் காத்திருக்கிறது
கடுகி வருவாயா,
காலன் என் கை பிடிக்கு முன்னே... ..???
Posted by MANCHUBASHINI at 10:08 PM 0 comments

Sunday, July 4, 2010

செவி சாய்க்க மாட்டீரா ?



தானாயும் திருந்தீராம், சொல் புத்தி கேளீராம்
வெட்டுவது எம்மையும், உமக்கான குழியையும் தான்..
பிள்ளை பறிகொடுத்த அன்னையாய் பூமித்தாய்
கதறுவது உம் செவியில் ஏறாதா…???

நீர் பிறந்தவுடன் தொட்டிலாயும்
மாண்டவுடன் கொள்ளியாயும் இடையில் பல
தேவைக்காயும் எம்மை நாம் அர்ப்பணிக்க
கிஞ்சித்தும் சிந்தியாமல் காடழித்து நாடு செய்தீர்
வெற்றிடங்கள் தோறும் கட்டடங்களாக்கி,
மழைக்கும், நிழலுக்கும் பரிதவித்தே ஏங்குகின்றீர்,

பட்சிகள் கூடற்றுப் பதற
எமை வெட்டிச் சாய்க்கும் போதினில்
சிறு செடியாவது நடுவதற்கு உமக்கு மனம்
ஏகாதோ, மனச் சாட்சி வதைக்காதோ....??

மனித உயிர் மலினப் பட்ட பூமியில்
என் குரலோ சபையேறும்…..!!!

மனதில் வைப்பாய் மானிடனே
ஆண்டு திளைக்க இப்பூமி உம் முன்னோர்
தரவில்லை உம் பிள்ளை உமக்காய்
விட்டிருக்கும் வாடகை மண்....!!!

ஆக்கத் தான் ஆகாதெனிலும்
அழிக்காமலேனும் கொடுத்திடு அவர் வசம் !!!
Posted by MANCHUBASHINI at 11:40 PM 6 comments

Saturday, June 26, 2010

வாழ்க்கைச் சக்கரம்.

கிடையாய்க் கிடக்கவன்றே
கடையப்பட்டது சக்கரம்,
நிமிர்ந்து நின்றோடிடத் தான்
நிகழ்ந்திடும் மாற்றமே...
அச்சாணிப் பிடியில் சில்லும்
அசைந்திடல் போல,
நம்பிக்கையைப் பிடியாக்கி
நகர்த்திடு காலச் சக்கரத்தை.

ஓரிடத்தில் தரித்திடல் தேக்கமேயென
மேலும் கீழுமாய் உருளும்
சக்கரம் சொல்லிடும்,
வாழ்வின் நியதியும் அது போலாமே
உயர்வு தாழ்வு அடிக்கடி நிகழ்ந்திடும்.

கை ஏந்தி நின்றவர்
கை காட்டிப் பேசலும்,
உச்சத்தில் இருந்தவர்,
உடைந்து போய் வீழலும்
காலச் சுழற்சியாம்,
மாற்றமே மெய்யிங்கு
அறிவீர்காள் மேன்மக்காள்..!

முடிந்த கதை பேசியிங்கு
பயனில்லை கேட்பீர்காள்,
நம்பிக்கை கொண்டே
நாட்களைக் கழித்திடுங்கால்
சக்கரம் மேற் செல்லும்
மேன்மையும் கிட்டிடும்
வாட்டிடும் வாதைகள்
பொடிப் பொடியாகிடும்
அச்சாணியாய் நம்பிக்கையோடு
பொறுத்திருப்பீர் அது வரை ....!
Posted by MANCHUBASHINI at 11:06 PM 2 comments

Saturday, June 19, 2010

வாழ்க்கைப் பாடம்.


பிறப்பின் முன்பும் அறியோம்,
இறந்த பின் ஆவதும் அறியோம்,
இருப்பது சொற்ப நாளே
அது மட்டும் திண்ணமாகும்.

ஓடும் புளியம் பழமுமாய்,
வாழ்ந்திடல் கடினமிங்கே,
பற்று வைத்துப் பாசம் காட்டி,
பின் ரத்த விளாறாய்
இதயம் பிளக்கத் தோன்றிடும்
இழப்புக்கெல்லாம் காலமே
மருந்தாம் இங்கே,

கரைகின்ற நாட்களிலே உடல்
காயமது மறைந்துவிடும்
கோபத்தில் சிந்திய வார்த்தைகளும்
நீர்க்கக் கூடும் - தொலைத்த
இழப்புக்கள் மீண்டு வரா,
அனுபவத்தில் நோப்பட்டுத்
தெரிந்ததனால் சொல்கிறேன்....
இன்று கொட்டி நாளை அள்ளி
இன்று முறுகி நாளை சிரித்து,
வதை படும் மனங்களுடன்
எதற்கிந்த நோக்காடு,

வார்த்தைகளைச் சிந்தாதீர், பின்
சிந்தித்துப் பயனில்லை,
நாளை என்பது நிச்சயமாய்
நம் கையில் இங்கில்லை,
இன்றே செய்வோம்
அதை நன்றே செய்வோம்
வாருங்கள் தோழர்களே.
Posted by MANCHUBASHINI at 1:21 AM 2 comments

Monday, June 14, 2010

தயை கூர்ந்து மன்னியுங்கள்…..!!!

புள்ளினமே, எறும்புகளே
வாசலிலே கோலமில்லை
உம் பசியாற்றவிங்கு.....
என் மக்கள் வீதியிலே,
பல மனைகளில்
முற்றமென்ற ஒன்றில்லை……!

பழங்கோதும் அணில் பிள்ளாய்,
வௌவாலே, கிளிகளே
வீட்டினுள் பொன்சாயில்
உமக்கான கனிகளில்லை,
குந்தியிருக்க நிலமற்ற
என் மக்கள் மரமெங்கே வளர்ப்பதிங்கு….!

அன்னமிட வழியில்லைக் காக்கையரே,
பலருக்கு அவசரகதி உணவு
சிலருக்கு அரிசியில்
அவர் பெயரே இல்லை,
பட்டினியால் வாடுகிறார்…!

வாசல் வரும் ஆவினமே
களனித் தண்ணி கேளாதீர்.!
என் மக்கள் வரிசையிலே,
கோப்பைத் தேனீருக்காய்த் தவமிருக்க
பலருக்கு நேரமில்லை,
ஓடுகிறோம் சக்கரமாய்....!

தேன் தேடும் பூச்சிகளே
வந்திங்கு ஏமாந்து போகாதீர்,
புறாக் கூட்டில் வாழும் மக்கள்
பூச் செடிகள் வளர்ப்பதெங்கே.!?
பூப் போன்ற பிஞ்சுகளைக்
காப்பாற்ற வழியற்ற
என் மக்கள் பூச் செடியா வளர்ப்பரிங்கே..!?

பணம் தேடும் பயணத்தில்,
உம்மை ரசித்திடவும்,
உம் பசி போக்கிடவும்
இங்கெதற்கும் நேரமில்லை..!!!
இழப்புக்கள் நினைத்தழும்
என் மக்களுக்கோ
எதிர்காலம் பெருமிருட்டாய்…..…!!!

குறுகிப் போன மனங்கள் போல்
நீங்களும் அரிதாகிப் போவீரோ,
பாசமற்ற சொந்தங்கள் போல்
நீங்களும் ஒதுக்கி வெறுப்பீரோ..?
நாம் வேண்டுமென்று செய்யவில்லை
எம் நிலமை புரிந்து கொள்வீர்
தயை கூர்ந்து மன்னிப்பீர்…!!!
Posted by MANCHUBASHINI at 4:20 AM 2 comments

Thursday, June 10, 2010

இறுதித் துணை.

கரை வந்து மீளும் அலைகளாய்
காற்றில் அலையும் மேகங்களாய்
எதையோ தேடிக் கொண்டே
இருக்கும் மனதும்....!!!

பயணிகளில் சிலர்
இறுதி வரை வருவார்களென
மதியற்று எண்ணி,
அன்புடன் அருகமர்த்திப்
பல கதைகள் கூறி,
அவர் நோவைத் தான் வாங்கி
தன் சுமை மறந்திருந்த
அருந் தருணம் மறந்ததுவும்
ஏனென்று தெரியவில்லை
அறிந்திடவும் விரும்பவில்லை,

நாவினால் விஷம் தடவி
வார்த்தைகளில் நாண் ஏற்றி
பாணமதை ஏவியதில்
உன் குறி தப்பவில்லை,
வீழ்ந்தது அன்பெனும் சாம்ராஜ்யம்,
இல்லையில்லை அப்படி
நீ சொல்லி வந்த உன்
வெளி வேஷம்.

விரல் கொண்டே
விழிகள் குத்தி,
வடிந்த குருதி நிறம்
பார்த்த உன்னிடம்
கற்ற பாடம்
வேறெங்கும் கற்றதில்லை,
சென்றொழிந்த காலமெண்ணி
வீண் பொழுது போக்க வெட்கம்,

கூர் நகங்களின் கிழிப்புக்கள்
இதயச் சுவரெங்கும்,
விரிசல்களாகவும், வெடிப்புக்களாகவும்
உன் இடத்தில் இறங்கிட,
விட்டுச் செல்லும் வடுக்கள்
துணையாய் இறுதிவரை.
Posted by MANCHUBASHINI at 12:35 AM 3 comments

Monday, June 7, 2010

முற்றத்து மா மரம்.

புது வீட்டின் முற்றத்தில்
அமைதியாய் அழகாய்
கிளை பரப்பி பச்சென
நின்றது அந்த மாமரம்,

கண்டதுமே ஊஞ்சல் கட்டி
ஆடி விடத் துடித்து மனது,
ஊஞ்சலில் கிழிருந்து காலுன்னி
மேலெழ வயிற்றுக்குள்
கிளம்பும் ஜிவ்வென்ற உணர்வு
பயமா,பரவசமா........?


நீ முந்தி, நான் முந்தி எனச் சண்டை
போட்ட நாட்களும், முதுகுப் புறம்
நீயேறி நிற்க இருவராய்க்
களித்திருந்த நாட்களும்
இன்றும் அம் மரம் போலவே
அடிமனதில் பசுமையாய்..!!

மாம் பூவின் நறுமணத்தில்
மனம் தொலைந்த காலங்கள்,
பிஞ்சுகளை ஊஞ்சலில் போய்
எட்டித் தொட்ட நேரங்கள்,
முற்றமுதல் பறித்ததனை
அடிமரத்தில் குத்தி
யாருக்குந் தெரியாமல்
கடித்துண்ட போதெல்லாம்,
அம் மாமரமும் அதைத் தழுவிச்
செல்லும் காற்றுமே சாட்சியாய்,

காலை தோறும் தனியாக
மரத்திலெ வந்து குந்திக்
கூவிடும் குயிலுக்குக்
குரல் கொடுப்பதுடன் விடிந்தன
அழகான நம் நாட்கள்,

அணில் விரட்டி, அது கோதும்
பழம் திருடி நாமுண்ண
எமைப் பார்த்து தலையசைத்துச்
சிரிக்கும் மரம் நம்முடனே,

ஊஞ்சலிலே அமர்ந்திருந்து
பாடத்தை அசை போட்ட
போதெல்லாம், மரமும் அசையாமல்
நின்று தானும் கேட்பதாய்
பாவனை செய்வதை
ரசித்திருந்தோம் –

நம் பல ரகசியங்கள்
நமக்கும் மரத்துக்குமே
இன்றுவரை தெரிந்ததாய்..!!!

அங்கு நானும் இல்லை,
நீயும் இல்லை, மரம் மட்டும்
தனித்திருக்கும்,
இருக்குமென்று தான் நினைக்கிறேன்
உன்னையும், என்னையும் போல்
இரு சகோதரிகள் அதில் ஊஞ்சல் கட்டி
ஆடக் கூடும்,
நம் போலவே
அம்மரத்தை நேசிக்கக் கூடும்,
நேசிப்பார்களென்று தான் நினைக்கிறேன்.
Posted by MANCHUBASHINI at 12:27 AM 9 comments

Thursday, June 3, 2010

மழையும் நானும்.

கனத்த போர்வைக்குள் சோம்பலுடன்
பூனை போல் உடல் சுருட்டி கதகதப்பை
சுகித்திருந்தேன், பேய் இரைச்சலுடன்
இரண்டாவது தினமுமாய் அடை மழை,
வெள்ளக் காடான வீதி வழி
போகத் தேவையில்லை,
அடுக்களையில் அடுக்கடுக்காக எல்லாம்,
மழை தீரும் வரை அவை தீரா...!

சாளரத்தின் வழியே என் பெயர் சொல்லி
அழைப்பது யார்....?
மெல்ல அடியெடுத்து அருகே சென்றேன்.......

மழையின் காதலியே,
மனம் விட்டுப் பேசலாமா....?

ஓ.... என் இன் மழையே, வா.... வா...!!!
எனக்கு உனைப் பிடிக்கும்,
என்றாலும் இன்றுடன் இரண்டு நாள்
விட்டுப் போக மனமில்லையோ ?

தோழியே நான் என் செய்வேன்,
தூரத்தில் ஓரிடத்தில் பொழியப் பணிக்கப் பட்டேன்
போகு முன்னே இடி, மின்னலை அனுப்பினேன்
ஏழை விவசாயி வாய்விட்டுக் கதறினான்
கதிரறுக்கும் சமயத்தில் ஏன் வந்தாய் இங்கென..!

காற்றின் துணைகொண்டு
ஓடினேன் மற்றோரிடம்
மரங்களே வீடுகளாய், வானமே கூரையாய்
பல ஆயிரம் மக்கள் நிர்க்கதியாய், மனம் வெதும்பி
சிறு துளியாய் அவர்கள் மீது
கண்ணீர் சிந்தியே நகர்ந்தேன் அங்கிருந்து....!

இனியும் தாங்காது சூலின் பாரம் என
இறக்கிவிட எத்தனிக்க
களிப்புடன் பொழுது கழிக்க
மைதானமெங்கும் திரள் மக்கள்
போ மழையேயெனப் பெருங் கூப்பாடு,
தாங்கவில்லை அவர் கூச்சல்
ஓடோடி வந்தேனிங்கு....!

பல நாள் பாரம் இறக்கிவைக்க
வேண்டுமல்லோ,
ஓட்டைக் கூரை வீடுகளில்,
பாத்திரங்கள் மழை நீர் சேர்க்கும்,
அடுத்த வேளை சமையலுக்கு
விறகெல்லாம் ஈரமாய்,
உலர் ஆடை இருக்காது மாற்றிட
பல பிஞ்சுக் குழந்தைகளுக்கு,
தெருவோரப் பிச்சைக்காரனுக்கோ
ஒதுங்க இடம் தெரியாது,
அன்றாடங் காய்ச்சிகளுக்கு
கூலியும் இருக்காது,
சிறகு தூக்கிப் பறக்க
பட்டாம் பூச்சிகள் தடுமாறும்,
குஞ்சுகளுக்கு உணவு தேட
பறவைகளும் துணியாது,
சுமூக நிலை சீர்கெடும்,
இருந்தாலும் கவலையில்லை....!

என் தப்பு இதிலில்லை,
வராவிட்டால் பெருங் குற்றம்
ஆகையினால் வந்துவிட்டேன்
பொறுத்தருள வேண்டுமெனை,
பல நாள் சுமையிது
கொட்டித் தீர்த்துப் போவேன் நான்...!

ஒழுகாத மாடி வீட்டில்
ஒய்யாரமாய் சன்னல் வழி
சூடான தேனீருடன்,
சிற்றுண்டி கையிலேந்தி
எனை ரசிக்கும் உன்னைப் பார்க்க
வந்ததிலே பேருவகை...!

என்னை வேண்டிடும் இடம்
சென்று பொழியும் வரை
சுமந்து செல்லக் காற்றுக்கோ
முடியவில்லை, எனக்காய்
ஏங்கும் மக்கள் பல்லாயிரம்
பேரிருக்க, தலை சுற்றி
தறி கெட்டுத் திசை மாறி
இங்கேயே தங்கி விட்டேன்,
என்னால் நேர்ந்த அழிவுக்கு
யாரிடம் கேட்பேன் மன்னிப்பு,
பிராயச்சித்தமாய் இன்னும்
ஓர் தினம் அழுதுவிட்டுப் போகிறேன்....!

அவரவர் தலைவிதிக்கு நான் என்ன
செய்வது, உன் தோழி நான்
உன்னைப் போல் எனக்கும்
மற்றவர் பற்றிக் கவலை கொள்ள
நேரமே இல்லை.....!!!
Posted by MANCHUBASHINI at 12:51 AM 6 comments

Sunday, May 30, 2010

தவிப்பு....!!!


உயிரின் துடிப்பு மிக வேகமாகிட
நேரமுள் முன்னரிலும்
மெல்ல நகருவதாய்
இன்ப வேதனையிலகப்பட்ட
மனது குறை கூறும்.

இதயத் துடிப்பை இது நாள்வரை
கண்டு கொள்ளாதிருந்தேன்;
உன் இதயம் எனக்காய்த்
துடிப்பதாக நீ சொன்ன நாளிலிருந்து,
எனதுயிரும் சேர்ந்து துடிப்பதை
சொல்வதற்காய்த் தவிக்கிறேன்.

பிரிவு வல்லிய நோவைத் தந்தாலும்
நம் காதலைப்
பலமடங்கு கூட்டியத்தைச் சொல்ல
என் கணனிப் பலகையில் எழுத்துக்களைத்
தேடிக் களைக்கிறேன்..!!!

சிறு புன்னகையாலும்
ஓர விழிப் பார்வையாலும்
விழுங்கப் போவது என்னையும்
உனக்காகத் தேடிப் பொறுக்கிய
வார்த்தைகளையும் என்பது
சர்வ நிச்சயமாகத் தெரிந்தும்,
நாட்காட்டியை இரவிலேயே கிழித்து விட்டு
ஒத்திகை பார்க்கிறேன் புதுமையான தவிப்புடன்
.
Posted by MANCHUBASHINI at 11:03 PM 2 comments

Thursday, May 27, 2010

நீங்காதுன் நினைவலைகள்....!

சேர்ந்திருந்த காலங்கள்
பனியாய் உருகியதே,
நீண்டிருக்குந் தனிமையதில்
வதைபடுது என் மனமே,

மின்னலென விழி வெட்டி
வீழச் செய்தெனைச் சாம்பலாகிச்
சென்றனையே, மின்னலில்
பிறந்த காட்டுத் தீயிலென்
உயிர் பற்றியெரியுதடி.

ஊருக்குட் புகுந்த சமுத்திரமாய்
ஆக்கிரமித்தவோர் பொழுதில்
கண் சொருகிக் கனாக் கண்டதென்
பேதை மனம் சுருட்டியள்ளிச்
செல்வாயென, கசக்கிப் போட்ட
பாதகியே துருவானதெந்தன் நெஞ்சம்.

உனக்காய் நட்டு வைத்த
மல்லிச் செடி மதாளித்துப்
பூக்குகையில், வெண்பூக்கள்
பார்த்தென்னை ஏளனமாய்ச் சிரிக்குதடி
கொம்பற்ற கொடியாய்
வீழ்த்தினாயே எனை மண்ணில்.

நினைவுகளை அழித்து விட
நிலையான வரம் வேண்டித்
தொழுகின்றேன், ஆனாலும்
தாய்மடி தேடி மீளும் ஆலம் விழுதாய்
வேர் விடுகிறதே பலமாய் என் செய்வேன்...!!!
Posted by MANCHUBASHINI at 11:51 PM 1 comments

Monday, May 24, 2010

கோடை காலம்.


வறண்ட பூமிக்கு வந்தது பூ மழை ,
இறந்து கொண்டிருந்த கலங்கள்
உயிர் கொண்டன அந்நாளில்,
சட்டென்று துளிர் விட்டது மனசு..!

அன்பெனும் நீர் வார்ப்பில்
சோலையும் செழித்திட,
படபடத்த பட்டாம் பூச்சிகளின்
சிறகசைப்பில் லயித்திருந்த
கணங்களிலே பசி தூக்கம் மறந்தது,
பெரு மாயமன்றோ நிகழ்ந்தது....!

நரம்புகளிலும் நாளங்களிலும்
அறுத்தெறிய முடியாத
கொடியாகப் பற்றிப் படர்ந்து
உன் இருப்பை உறுதி செய்தாய்.

மழைக்காலம் மாறிவிட,
வசந்தகாலம் வந்துதிக்க
சோலையெங்கும் வண்ணப் பூக்கள்,
கொடிப் பூக்களின் வாசம்,
குருதியிலும் சுவாசத்திலும்
விரவி நிற்க, புதிதாய் பிறந்ததாய்
இருவருமே கண்டு கொண்டோம்
உலகமே அழகாக,
ரசித்திருந்தோம், சுற்றம் மறந்தோம்.

கோடை வருமென
கிஞ்சித்தும் எண்ணவில்லை...!
கோடையிடையாய்
நீயே வந்தாய்....!

எனக்குள், நீ வளர்த்த காதல் அழிய,
உன்னைப் பெற்றவர்கள் அழியாமல் தடுக்க
இனிப்புப் பூச்சிட்ட கச்சல் மருந்தை
வருத்தியெனை விழுங்க வைத்தாய்...!

இருள்கவிந்த வதனம் தாங்கி,
கை பிசைந்து, கனியிதழ் துடிக்க
வார்த்தை தேடி நீ நிற்க
மனசுக்குள்ளே தொடங்கிய
கோடை மழையால்,
கலங்கள் யாவும் சில்லாய் சிதறிட,
கொடியின் வேரை
இழுத்துப் போட்ட
வேதனையில் நீ துடிக்க...,

உனை வதைக்க மனமின்றி,
தொடர் கோடையை ஏற்றுக் கொண்டேன்.
மீண்டும் காலங்கள் மாறக் கூடும்,
கருகி விட்ட சோலையது
துளிர்க்குமென்பது நிச்சயமில்லை....!!!
Posted by MANCHUBASHINI at 10:33 PM 0 comments

Wednesday, May 19, 2010

தொலைந்தது என் முகமூடி.


முகமூடிகள் இத்துப் பொய்த்துப்
போனவோர் கணத்தில்
வக்கிர மனங்களின்
உக்கிரம் தாங்காது
மரணிக்கத் துடித்து
ஊசலாடும் மனதை
பாழும் பணமும்
பசப்பான பாசமும்
கட்டிப் போட்டுப் பேரம் பேச,
பந்தயப் பொருளான
சின்ன உயிர்
நொடிக் கொருக்கால்
செத்து மீளும்,

மனதறிந்து வருகை தந்த
காலதேவன் முகத்திரை
பிய்த்தெறிந்து முழுமனதாய்
ஏற்றுக் கொள்ள

கோரப் பற்கள் கொண்ட
முகமூடி பூண்டு குதறிய
சில முகங்கள் தாம்
தொலைத்து விட்ட அனுதாப
முகமூடிகளைத் தூசுதட்டி
அவசர கதியில் மாட்டிக் கொண்டு
அடுத்த கட்டக் காட்சிக்கு மாறும்.

பேரண்டப் பெருவெளியில்
சஞ்சரிக்கும் என் வசம் இல்லை
இப்போ முகமூடி..!
Posted by MANCHUBASHINI at 1:39 AM 4 comments

Monday, May 17, 2010

இப்ப எனக்கு வேணும்..!!!


கேட்டதெல்லாம் வாங்கித் தரும் அப்பா
இப்ப வேணும்……..!
கேக்காமலே உண்ணத் தரும் அம்மா
உடனே வேணும்….!
செல்லச் சண்டை போட்டு ரொம்ப
நாளாப் போச்சு,
ஒளிச்சு விளையாடியது போதும்,
சின்னக்காவும் பெரியக்காவும்
தோற்றேன் நானே வா… வா…!

பள்ளிக்கூடம் மீண்டும் போக
கொள்ளை ஆசை எனக்கு…!
போடச் சட்டை, சப்பாத்து வாங்கித் தரும்
மாமாவையும் காணோம்…!


அம்மா அடிக்கும் போது அத்தை மடியே தஞ்சம்
ஆமி மாமா கூட்டிப் போன,
அவவைத் தேடித் தேடியே
கண்கள் சோர்ந்து போச்சு..!
சொன்ன கதையைத் திரும்பச் சொல்லும்
தாத்தா கூட இல்லை...!
தட்டிக் கொடுத்துத் தூக்கம் ஆக்கும்
பாட்டி எங்கு போனா…??

”ஆவலுடன் தேடுகிறோமில்”
என்னப் போலவே ஒரு
சுட்டிப் பையன் படமிருக்காம்,
ஒரு அக்கா வந்து சொன்னா,
என் பெயர் என்ன
என்று அவவும் என்னைக் கேட்டா,

அம்மாவுக்கு “கண்ணா”, அப்பாவுக்கு “செல்லம்”,
தாத்தா, பாட்டி சொல்லும் பெயர் “ராசா, கடவுள்”,
அந்தப் பெயர் எதுவும் அதில் இல்லை எண்டு
சொல்லி விட்டுப் போனா.

அகதிச் சிறுவன், அநாதைப் பையன்
என்றும் இப்ப என்னைச் சொல்லினம்
அந்தப் பெயர் இருக்கா
என்று கேக்க வேணும் அவவிடம்...!

இப்ப எனக்குத் தெரிஞ்சதெல்லாம்
பசி, தூக்கம் மட்டும் தான்
அதுக்கெண்டாலும் ஒரு
வழி பண்ணுங்கோவன்
யாரெண்டாலும் நீங்கள்…..!!!
Posted by MANCHUBASHINI at 6:07 AM 6 comments

Saturday, May 15, 2010

தவமிருக்கிறோம் நாம்.


நெடிதுயர்ந்து வான் தொடும்
கட்டிடங்களின் வரிசைகளிலும்
கரு நாகமாய் நீண்டு நெளியும்
சாலைகளோர பகட்டான
மின் கம்ப நேர்த்தியிலும்,
மூன்று நிமிடங்களுக் கொன்றாய்
உயரும் விண்ணூர்திகளிலும்
பரந்து விரிந்த நீலம்
குடித்த கடற் பரப்பிலும்,
மனம் மயங்கிய நாட்கள் போயின,

எதிலுமே பற்றற்றுக்
கனவுகளைப் பாலை நிலப்
புழுதியுடன் கரைத்த படி
மணற் துணிக்கை அள்ளி வரும்
அனல் காற்றின் வெம்மை சுகித்து
கண்கள் கசங்கி, வியர்வை குளித்து
நாட்களும் தவமிருக்கின்றன - என்னுடன்
ஆவலாய் உனைக் காண….!!!
Posted by MANCHUBASHINI at 5:50 AM 12 comments

Wednesday, May 12, 2010

வேண்டும் உன் நட்பு...!

திருவிழாவில் தொலைந்திட்ட
குழந்தையாய் நின்றவோர் நாள்,
கரம் பற்றி வழி சேர்த்தாய்
வாழ்த்திடவோர் வார்த்தையில்லை.

அன்பை விலை பேசாக்
காலைச்சுற்றும் குட்டி நாயாய்
சுற்றுமுன் நினைவுகளைப்
பொத்தி வைத்து அசைபோட
சொல்லவொண்ணா இன்பம் பொங்கும்.

வலிகளுக்கோர் வடிகாலாகத்
தோள் கொடுத்தாய் தோழனாக,
உவமையற்ற கவிதை வரியாய்,
பச்சென பதிந்து, மனத்தினிடை
வேரூண்டிச் செழித்திட்டாய்...!

ஆழமான அன்பினாலே
அதட்டிடும் போதில், அருண்டு சுருளுமெனை, அரவணைப்பாய் தாய் போலன்பாய்
ஆயுள் வரை வேண்டுமுந்தன்
ஆத்மார்த்தமான நட்பு...!
Posted by MANCHUBASHINI at 11:01 PM 2 comments

Monday, May 10, 2010

நினைவுகளில் கரையும் நிகழ்காலம்....!




ஆழ்துயில் கனவாய்
நிகழ்ந்தவை மறந்திடும்
எத்தனிப்புக்கள் தோல்வியுற,
நினைவுகளின் துரத்தல்களில்
திணறிக் கண்மூடிக் கிடப்பதே
பெரும்பாடாய்.....!

இருள் விழுங்கிச் சிவக்கும்
அதிகாலைச் சூரியனும்,
மணியோசையுடன் போட்டிபோடும்
புள்ளினங்கள் குரலிசையும்,
மண்மணமும், மென் காற்றும்,
மழலையும், மணாளனும்
மட்டுமே போதுமென்று
பல நேரம் மனமெண்ணும்,
பொல்லாத உலகத்தில்
இவைமட்டும் போதாவே.....!

பருவமாற்றப் பட்சிகளை
அலட்சியப் பார்வைகள் சிதைக்கா,
கவனம் யாவும்
முதலைக்கோ, அலைக்கோ
வசப்படாமல் மீளலாகும்...!

வருகையின் தடங்கள் மட்டும்
அழியாமல் சிலகாலம்
இருக்கும், பறவை எழுந்தபின்
கண நேரம் சிலிர்த்து ஆடிடும்
மரக் கிளை போல......!
Posted by MANCHUBASHINI at 11:34 PM 7 comments

கண்ணாடி உறவுகள்...



தொடரும் மௌனங்களுடன்
கரையும் பொழுதுகள்,
முனகல்கள் வார்த்தைகள்
என உதிர்க்கப்பட்டன
எடுக்கவும் கோர்க்கவும் படாமல்
பல நேரங்களில் அவை
அங்கேயே பரவிக் கிடந்தன.

இரும்புக் கவசமணிந்த
ஒரு உறவும் இங்கில்லை.
கண்ணாடி வார்ப்புக்களாய்
வார்த்தைச் சகதிக்குள் மூழ்கி
சில நேரம் நொருங்கியும்
பல நேரம் விரிசலுற்றும்
இலக்கற்று இழுபட்ட படி....!

விரிசல்களையும் நொருங்கல்களையும்
பிரயாசையுடன் பிறிதொரு
நாளில் அவையே ஒட்டிச் சீர் செய்தன,
இல்லையில்லை அப்படிக்
காட்டிக் கொண்டன,
உருவம் திரும்பக் கிடைத்தாலும்
அதே நெருக்கத்தைத்
தர மறந்தனவா, இல்லை
தர முடியாமல் திணறினவா
சிந்திக்கப் பிடிக்கவில்லை,

எது எப்படியிருந்தாலும்
சிதைந்த போது
வெளியே தூக்கி வீசப்பட்ட
இதயத்தை கூட்டியள்ளி
உள்ளே வைத்துப்
பக்குவமாய் பூட்டி
முகத்திலும் பொய்யாய்ப்
புன்னகையைப் பொருத்தி
மீண்டுமொரு தாக்குதலுக்கு
தளராமல் தயார் நிலையில்.........!
Posted by MANCHUBASHINI at 11:25 PM 5 comments
Newer Posts » Home
Subscribe to: Posts (Atom)

சமீபத்தில் விதைத்தவை!

Loading...

வருகையின் தடங்கள் என்றும் அழியாத அன்புடன் என்னுள் . . .

வருகையின் தடங்கள் என்றும் அழியாத அன்புடன் என்னுள் . . .

சமீபத்திய பின்னூட்டங்கள்

Loading...

Blog Archive

  • ▼  2010 (23)
    • ▼  August (5)
      • மின்னல் போல் மறைந்தனையே..!
      • பிச்சை.
      • வசந்தத்தை நோக்கிய தவம்.!
      • பெண்ணே நீ போனதெங்கே.?
      • ஆடிவேல் நினைவுகள்...!
    • ►  July (3)
      • கல்லறைகளின் கதறல்கள்........
      • உனக்கான காத்திருப்பு.....!
      • செவி சாய்க்க மாட்டீரா ?
    • ►  June (6)
      • வாழ்க்கைச் சக்கரம்.
      • வாழ்க்கைப் பாடம்.
      • தயை கூர்ந்து மன்னியுங்கள்…..!!!
      • இறுதித் துணை.
      • முற்றத்து மா மரம்.
      • மழையும் நானும்.
    • ►  May (9)
      • தவிப்பு....!!!
      • நீங்காதுன் நினைவலைகள்....!
      • கோடை காலம்.
      • தொலைந்தது என் முகமூடி.
      • இப்ப எனக்கு வேணும்..!!!
      • தவமிருக்கிறோம் நாம்.
      • வேண்டும் உன் நட்பு...!
      • நினைவுகளில் கரையும் நிகழ்காலம்....!
      • கண்ணாடி உறவுகள்...

Followers

 
Copyright © க-விதை . . .. All rights reserved.
Blogger templates created by Templates Block
Wordpress theme by Uno Design Studio